பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள், கடந்த சில நாட்களாக பச்சை நிறமாக காட்சியளித்தன. இதனால் பொதுமக்கள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். நதிநீர் மாசடைந்துள்ளதால்தான் இவ்வாறு பச்சை நிறமாக காட்சியளிப்பதாக மக்கள் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ‘நதிநீர் பச்சையாக மாறுவதற்கு காரணம் நாங்கள்தான்’ என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வந்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, “நாங்கள்தான் பச்சை நிற சாயத்தை நதி நீரில் கலந்தோம், பிரான்ஸின் இயற்கை வளங்களில், கடந்த வருடங்களை விட தற்போது 10 சதவிகிதம் பசுமை குறைந்துள்ளது. எனவே பிரான்ஸ் மக்களுக்கு இது குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்துதான் இவ்வாறு செய்துள்ளோம்.
நதிகளில் கலக்கப்பட்ட பச்சை நிற சாயம் நீர்வாழ் உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை அல்ல. இதனால் எவ்வித கேடும் வராது. இந்த பச்சை நிற சாயம் நதி நீரின் ஓட்டத்தை கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படுவதுதான்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது சுற்றுலா பயணிகளும், பிரான்ஸ் மக்களும் பச்சை நிறமாக மாறியுள்ள நதிகளை வியப்போடு பார்த்து செல்கின்றனர்.