இமயமலை ஏறும் போது உயிரிழந்தவர்களின் சடலம் 16 வருடங்களின் பின் மீட்பு!!

906

Himalaya

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மலை ஏறும் வீரர் அலெக்ஸ் லோவ். இவர் கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது நெருங்கிய நண்பரான டேவிட் பிரட்ஜஸ் மற்றும் சக கூட்டாளிகளுடன் இமயமலை சிகரத்தில் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இவர்கள் சீனாவின் திபெத் பகுதியில் உள்ள ‘ஷிஷாபங்மா’ சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. அலெக்ஸ் லோவ் மற்றும் டேவிட் பிரட்ஜஸ் ஆகிய இருவரும் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்தனர்.

அவர்களது உடல்களை மீட்க சக வீரர்கள் போராடி வந்தனர். நீண்ட நாட்கள் ஆகியும் பலன் கிட்டாததால் அவர்கள் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் அலெக்ஸ் லோவ் மற்றும் டேவிட் ஆகியோரின் உடல்கள் ‘ஷிஷாபங்மா’ மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து நேபாளத்தில் வசித்து வரும் அலெக்ஸ் லோவின் மனைவி ஜெனிபர் லோவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புபடையினர் மூலம் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

ஜெனிபர் லோவ் தற்போது தனது புதிய கணவர் கான்ராட் ஆன்க்கருடன் இணைந்து முன்னாள் கணவர் அலெக்ஸ் லோவின் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சம்பவத்தின் போது கான்ராட் ஆன்க்கரும், அலெக்ஸ் லோவுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் அவர் பனிச்சரிவில் சிக்காமல் காயங்களுடன் உயிர்தப்பினார். பின்னர் இவர் 2011ம் ஆண்டு ஜெனிபர் லோவை திருமணம் செய்து, அவரது 2 குழந்தைகளையும் தத்து எடுத்து கொண்டார்.