
2015 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் இசையமைப்பாளர் இளையராஜா சிறந்த பின்னனி இசையமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ராஜவர்தன்சிங் ரத்தோர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் சிறந்த நடிகருக்கான விருதை பிக்கு படத்திற்காக நடிகர் அமிதாப் பெற்றார். தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை கங்கனா ரணாவத் பெற்றுகொண்டார்.
சிறந்த படத்திற்கான விருதை பாகுபலி படத்திற்காக அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தயாரிப்பாளர்கள் ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் பெற்றுகொண்டனர்.
தமிழில் விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை சமுத்திரக்கனியும், சிறந்த எடிட்டருக்கான விருதை மறைந்த கிஷோருக்காக அவருடைய தந்தையும் பெற்றனர். சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட விசாரணைக்கான விருதை தனுஷ், வெற்றிமாறன் சார்பில் சுரேஷ் பெற்றுகொண்டார்.
தாரை தப்பட்டை படத்தின் சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் விருது நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. ஆனாலும் தேசிய விருது நிகழ்ச்சியை புறக்கணிப்பது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. 2010 ஆம் ஆண்டு பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதினையும் அவர் பெற்றுகொள்ளவில்லை.
பின்னனி இசை நன்றாக செய்பவர்களுக்கு பாடல்களை போட தெரியாதா பின்னணி இசை, பாடல்களுக்கு என்று விருதினை தனியாக கொடுக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தினை முன்பே கூறியிருந்தார். இந்த முறையும் இந்த காரணத்திற்காகத்தான் அவர் விருது நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.





