வவுனியா நகர எல்லைக்குள் வவுனியாவிற்கான பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளம் பகுதியில் அமைத்துத்தருமாறு கோரி உள்ளுர் விளைபொருள் விற்பனை சங்கம் எற்பாடு செய்த அமைதிப்பேரணி இன்று காலை நடைபெற்றது.
காலை 9.30 மணியளவில் தினச்சந்தையில் ஒன்று கூடிய பொது அமைப்புக்கள், மாவட்ட விவசாயிகள், மொத்த கொள்வனவாளர்கள், விற்பனையாளர்கள் எனப் பலரும் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இப் பேரணி பஸார் வீதியூடாக – தர்மலிங்கம் வீதி வழியாக, ஹொறவப்பொத்தான வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்
தொடர்ந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் வவுனியா பிரதேச செயலாளர், வர்த்தக சங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்க உறுப்பினர்கள, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து பொருளாதார மத்திய நிலையம் அமையவுள்ள காணி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இன்று தினச்சந்தை கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டு இப் பேரணிக்கு ஆதரவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






