
சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ அல்லது யாரிடம் இருந்தும் பணம் வாங்கவோ மாட்டேன் என உளுந்தூர்பேட்டை பரிக்கல் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வகையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் 100 கோடி ரூபாவை எட்டுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் உணவுப் பொட்டலங்களுக்குள் பணம் வைத்து கொடுப்பது, பணத்துக்கு பதிலாக பெற்றோல் போடுவதற்கான டோக்கன்கள் கொடுப்பது என புதுபுது வியூகங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பிரதான கட்சிகளான ஆளும் அ.தி.மு.க, தி.மு.க என்பனதான் இத்தகைய நடைமுறைகளை கடைபிடிப்பதாக தே.மு.தி.க, ம.தி.மு.க, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என்பன குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந் நிலையில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டார். அப்போது தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன் என சாமி சிலை முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனை தே.மு.தி.க.வின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளனர்.





