
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 9 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கப் போவதாக அமுலாக்கத் துறை அறிவித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் 9,600 கோடி கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியா வரவழைக்கவும், கடனை திரும்பச் செலுத்த வைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் இந்தியாவில் உள்ள அவரது அசையா சொத்துகள் மற்றும் பங்குகளை முடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மல்லையாவுக்குச் சொந்தமான பங்களாக்கள், விலை உயர்ந்த கார்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றின் மதிப்புகள் ஏற்கெனவே கணக்கிடப்பட்டுள்ளன.
இதை தவிர, உள்நாட்டில் அவருக்குச் சொந்தமாக உள்ள அசையா சொத்துக்கள் மற்றும் பங்குகள் தற்போது மதிப்படப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 9,000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை முடக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.
இதனிடையே, மல்லையாவுக்குச் சொந்தமான ஜெட் விமானங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் வரும் 29 மற்றும் 30ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அவரது கடன் நிலுவையில் 535 கோடியை ஈடுகட்டும் வகையில், அந்த விமானங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.





