எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் சாதனை படைக்கவுள்ள இலங்கையர்கள்!!

545

Everest

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை சென்றடைந்து சாதனை படைக்கும் நோக்கில் இரு இலங்கையர்கள் காத்திருக்கின்றனர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கும் செல்லும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜயந்தி குருஉத்தும்பால மற்றும் யோஹான் பீரிஸ் (Jayanthi Kuru Utumpala – Johann Peiris) ஆகிய இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர்களாகும்.

இவர்களின் எண்ணம் ஈடேறுமானால், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்ற முதலாவது இலங்கையர்கள் என வரலாற்று சாதனை பதிவு செய்வர்.

இமயமலை எனப்படும் எவரெஸ்ட் மலைப் பகுதி அதிக குளிராக உள்ள நிலையில் வளிமண்டலத்தில் ஒட்சிசன் குறைந்த அளவில் உள்ளது.

இந்த நிலைமையினை தாங்கிக்கொள்ள கூடிய வகையில் அவர்களின் உடல்களை தயார்படுத்த ஒன்றரை மாதம் பயிற்சி பெற்று, உரிய முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜயந்தி குருஉத்தும்பால மற்றும் யோஹான் பீரிஸ் தெரிவித்துள்ளனர்.

அதற்காக எவரெஸ்ட் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து முறையே இலக்கம் 1, 2 மற்றும் 3 ஆகிய முகாம்களுக்கு சென்று மீண்டும் வருகை கட்டங்களை நிறைவு செய்துள்ளதாக யோஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முதலாம் இலக்க முகாமிற்கு சென்று மீண்டும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள முகாம்களுக்கு வருவதாகவும், அதன் பின்னர் அரை நாள் ஓய்வு பெற்றுக்கொண்டு மீண்டும் இரண்டாம் இலக்க முகாமிற்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரவேண்டும். அத்தகைய ஒரு சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும் எனவும், அவை அனைத்தையும் தாங்கள் நிறைவு செய்துள்ளதாக ஜயந்தி குறிப்பிட்டுள்ளார்.

மலை உச்சியில் 10 நாட்களுக்கு காலநிலை சிறப்பான நிலையில் காணப்படும் எனவும், அதனை இலக்கு வைத்து மலை உச்சிக்கான பயணத்தை ஆரம்பிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தாங்கள் தற்போது இறுதி கட்டமாக மலை உச்சிக்கு செல்லவுள்ளதாகவும், அதற்கு அவசியமான காலநிலைக்காக காத்திருப்பதாகவும், தாங்கள் நினைத்ததனை விடவும் இது மிகவும் கடினமான விடயம் என குறிப்பிட்டுள்ளனர்.

குழு என்ற ரீதியில் தமக்கு எவரெஸ்ட் சவாலை வெற்றி கொள்ள முடியும் என ஜயந்தி மற்றும் பீரிஸ் எதிர்பார்த்துள்ளனர்.

இதுவரையில் எவரெஸ்ட் மலை உச்சிக்கு வெற்றிகரமான முறையில் மூவாயிரம் பேர் வரையில் சென்றுள்ளனர்.

எவரெஸ்ட் மலை உச்சிக்கு ஏறிய சந்தர்ப்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 210 என பதிவாகியுள்ளது.