வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நயினாமடு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள விவசாயக் கிராமமே பெரியமடு இக்கிராமத்தில் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் விவசாயத்தை தமது பிரதான தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.
இக்கிராமத்தில் இரண்டு பிரதான சிறிய நீர்ப்பாசன குளங்களும் இரண்டு பாவனைக்கு உட்படுத்த முடியாத நீர்ப்பாசனக் குளங்களும் அமைந்துள்ளன.
கடந்த நான்கு நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இக்கிராமத்தின் பிரதான நீர்ப்பாசனக் குளமான வண்ணாங்குளத்திற்கு நீரைக்கொண்டுவருவதற்காக புதிதாக கடந்த வருடம் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இந்தவருடம் முற்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாயுடன் கூடிய இரண்டு கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட அணைக் கட்டானது உடைப்பெடுத்துள்ளது.
இதனால் வண்ணாங்குளத்திற்கான பிரதான நீர்வரத்து தடைப்பட்டுள்ளதாகவும் இதனை திருத்தியமைப்பதற்கு கமக்கார அமைப்பும் கமநல சேவை திணைக்களமும் விரைந்து செயற்பட்டு திருத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இக்கிராமத்தை ஊடறுத்து முத்தையன் கட்டுகுளத்திற்கு நீரைக்கொண்டுசெல்லும் பிரதான ஆறாக கருதப்படும் கரடியான் ஆறு பெருக்கெடுத்துப்பாய்வதனால் பெரியமடுவில் இருந்து வண்ணாங்குளம் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதிப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வண்ணாங்குளம் கிராமத்திற்கு ஆரம்பகாலம்முதல் இன்றுவரை ஆற்றை மறித்து பாலம் அமைக்கப்படாத காரணத்தால் மக்கள் தமது உயிர்களை பணையம்வைத்தே போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆயிலடிச் சந்தியிலிருந்து பெரியமடு ஊடாக வண்ணாங்குளம் செல்லும் ஐந்து கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட பிரதான வீதியானது 1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்றுவரை புணரமைக்கப்படாமையால் வீதியானது குண்றும் குழியுமாக போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் காணப்படுவதனால் பாடசாலை மாணவர்களும் கிராம மக்களும் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.
இது தொடர்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை, நெடுங்கேணி பிரதேசசபை, உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வீதி திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இவ் அடைமழை காரணமாக மக்களின் வீட்டுத்தோட்டப் பயிர்களான பப்பாசி, மிளகாய், முருங்கை போன்ற பயிர்களும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.