தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க கிளம்பிவிட்டார்.
நடந்து முடிந்த இந்த தேர்தலில் 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கிறார்.
அதேசமயம் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தல் களம் கண்ட தேமுதிக ஓர் இடம் கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வெற்றி வாய்ப்பை இழந்ததோடு டெபாசிட்டையும் இழந்துள்ளார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், நமது வெற்றி தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது. மனம் தளர வேண்டாம். நாம் ஆட்சியமைப்பது உறுதி” என்று தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, ‘தமிழன் என்று சொல்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாக அப்படத்தின் புகைபடத்தோடு அவர் தெரிவித்திருக்கிறார்.






