தமிழில் விஜய் அண்டனி நடிப்பில் வெளிவந்த வெற்றிநடை போட்ட பிச்சைக்காரன் திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இசை அமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனிப் பாணியை அமைத்து வெற்றிகரமான நாயகனாக வலம்வரும் விஜய் அண்டனிக்கு சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பிச்சைகாரன் வணிக ரீதியாக மிகப்பெரிய அந்தஸ்தைக் கொடுத்தது.
தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற இப் படம் தெலுங்கில் பிச்சகாடு எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. கடந்த வார இறுதியில் தெலுங்கு வெளிவந்த பிச்சகாடு பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது.
தமிழ் திரையுலகைத் தாண்டி, தெலுங்கு திரையுலகிலும் தான் நடித்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது விஜய் அன்ரனிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து விஜய் அண்டனி கூறும்போது, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்று இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்து இருக்கிறது.
தமிழ்த் திரை உலகில் இருந்து வரும் நடிகர்கள் பொதுவாக தெலுங்கில் நிலைப்பது இல்லை என்ற கூற்றை என் அடுத்தடுத்த படங்களின் கதை, மற்றும் மற்ற அம்சங்கள் பொய்யாக்கும் என்று நம்புகிறேன். இந்த வெற்றி ஒரு நடிகனாக என்னை இன்னமும் மேம்படுத்தி தென்னிந்தியாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வர வைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.






