ராஜஸ்தான் மாநிலத்தில் நாள் முழுவதும் வெயிலில் கட்டி வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த ஒட்டகம் தனது எஜமானரை தாக்கி, அவரது தலையை கடித்து குதறியது.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் கோடை வெயில் உக்கிரமாக கொளுத்தி வருகிறது. இதனால் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அம்மாநிலத்தில் உள்ள மங்தா கிராமத்தில் உர்ஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு செல்லப் பிராணியாக ஒட்டகத்தை வளர்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை விருந்தினர்கள் ஏராளமானோர் வந்ததால் ஒட்டகத்தை வீட்டுக்கு வெளியே கட்டிவிட்டு அவர்களை உபசரிப்பதில் மூழ்கி போனார்.
திடீரென அன்று இரவு அவருக்கு ஒட்டகத்தின் நினைவு வந்ததும், வெளியே ஓடி வந்து அதன் கயிற்றை அவிழ்க்க முயற்சித்தார். நாள் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்த அந்த ஒட்டகம், உர்ஜாராமை எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன், அவரது தலையையும் பற்களால் கடித்து குதறியது. இதனால் பதறிப் போன அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஒட்டகத்தை சமாதானப்படுத்தி, உர்ஜாராமை காப்பாற்றினர்.