தென் பங்களாதேஷில் 20 இறாத்தல் நிறையுடைய இராட்சத தலையுடன் பாலகன் ஒருவன் வாழ்வது தொடர்பான தகவல் சர்வதேச ஊடகங்களில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
எமொன் என அழைக்கப்படும் மேற்படி 2 வயது பாலகனின் தலையின் நிறை ஒரு வயதுக் குழந்தையொன்றின் சராசரி நிறையை ஒத்ததாகும். அந்தப் பாலகன் பிறந்த போது அதன் தலை சாதாரண குழந்தைகளை விடவும் சிறிது பெரிதாக மட்டுமே இருந்ததாகவும் ஆனால் கடந்த 2 வருட காலத்தில் அதனது தலை படிப்படியாக பெரிதாகி இராட்சத உருவை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூளை தண்டுவட திரவம் மண்டையோட்டில் சேர்வதால் ஏற்படும் ஹைரோசெபலஸ் என்ற பாதிப்பு அவனுக்கு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
வழமையாக மூளையையும் முள்ளந்தண்டையும் சூழ்ந்து காணப்படும் திரவம் அந்த உறுப்புகளுக்கு மெத்தையாக செயற்பட்டு பாதுகாப்பு அளிப்பதுடன் அந்த உறுப்புகளுக்கான போஷணைகளை வழங்குதல் மற்றும் கழிவகற்றல் செயற்கிரமங்களுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது.
மூளையானது தினசரி சுமார் ஒரு பைந்து புதிய தண்டுவட திரவத்தை தொடர்ச்சியாக உற்பத்தி செய்கிறது. அதேசமயம் மூளையால் வெளியிடப்பட்ட பழைய திரவம் குருதிக் கலங்களால் துரிதமாக அகத்துறிஞ்சப்படுகின்றன. குருதிக் கலங்களால் அந்தத் திரவம் அகத்துறிஞ்சப்படுவதில் இடையூறு ஏற்படும் போது மூளை தண்டு வட திரவம் அதிகமாகச் சேர்ந்து மூளை மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும். அத்தகைய பாதிப்பே எமொனுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புக் காரணமாக எமொனால் பேசவோ நடக்கவோ அல்லது அவயவங்களை அசைக்கவோ முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன் இந்தியாவில் இத்தகைய பாதிப்புக்குள்ளான ரோனா பேகம் என்ற பாலகிக்கு ஒரு தொகை அறுவைச் சிகிச்சைகளின் மூலம் அவரது தலையின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமக்கு இந்திய புது டில்லி சென்று அத்தகைய சிகிச்சையை பெற போதிய வசதியில்லை என எமொனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.