காதலியைக் கொலை செய்து கல்லில் கட்டி கிணற்றில் போட்ட காதலன்- முல்லைத்தீவில் சம்பவம்..

433


 

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த 25 வயது துரைசாமி சரோஜா 25 என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சரோஜாவை காதலித்துத் திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்தவரெனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மே மாதம் 24ஆம் திகதியன்று, மாங்குளம் பனித்தம்குளம் பிரதேசத்திலுள்ள கிணற்றுக்குள்ளிருந்து இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.



குறித்த சடலம் கல்லொன்றுடன் சேர்ந்து கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலத்தை உறவினர்கள் இனங்கண்டதற்கமைய அவர்களது வாக்குமூலங்கள் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இச்சம்பவம் தொடர்பில் மேலும் :-


மேற்படி யுவதியை காதலிப்பதாகக் கூறி வந்த இளைஞன் அவரையே திருமணம் முடிப்பதாக வாக்குறுதி வழங்கி குறித்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். யுவதி அங்கு சென்றதையடுத்து, தனது நண்பனுடன் வந்திருந்த காதலன் பாழடைந்த வீட்டுக்கு யுவதியை அழைத்துச் சென்ற பின் தனது நண்பனுடன் இணைந்து காதலியை வல்லுறவுப்படுத்த முயன்றுள்ளார்.

இதற்கு குறித்த யுவதி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்தே இளைஞர்கள் இருவருமாக சேர்ந்து யுவதியை அடித்துக் கொலை செய்த பின்னர் சடலத்தை கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் போட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் அதேவேளை அவர்கள் நாளை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை மேற்படி யுவதி கொலை செய்யப்பட்டுள்ளமை மரண விசாரணைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.