ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நகரி தொகுதியில் இருந்து வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ரோஜா.
இவர் சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது தனது முழு சொத்து விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், எனவே அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் அறிவிக்க கோரி புத்தூரை சேர்ந்த எஸ்.எஸ்.ராயுடு என்ற வழக்கறிஞர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து எஸ்.எஸ்.ராயுடுவின் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ரோஜா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த 2 வழக்குகளையும் ஒரே நேரத்தில் விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி 2 வழக்குகளும் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, 2 வழக்குகளையும் ஒரே நேரத்தில் விசாரிப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது எனவும் தனது வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி ரோஜா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ரோஜாவின் வக்கீல் ரமேஷ் கூறினார்.






