கர்ப்பமான பெண்கள் தமது பிரசவங்களைப் பற்றி, பிரசவ முறைகளைப் பற்றி பல்வேறு எதிர்பார்ப்புகள், விருப்பு,வெறுப்புக்கள் அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பார்கள். அதுவும் பிரசவ திகதி நெருங்க, நெருங்க இது சுகப் பிரசவமாக இருக்குமா? அல்லது சிசேரியன் பிரசவமாக இருக்குமா? என பெண்களும் கணவன்மாரும் ஒரு ஏக்கத்துடன் இருப்பார்கள்.
பெரும்பாலான தம்பதியினர் இதனை எப்படியாவது ஒரு சுகப் பிரசவமாக நடத்திவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் நிறைவேற்றுவதே மருத்துவத்துறையில் எமது கடமையாகும்.
நடைமுறையில் சிசேரியன் பிரசவம் மருத்துவத் துறையைப் பொறுத்தவரையில் இலகுவாக ஒரு குறுகிய நேரத்தில் முடித்துவிடக் கூடியதாக இருப்பதனால் மருத்துவர்களைப் பொறுத்தவரையில் சிசேரியன் பிரசவம் சுலபமான தீர்வாக இருந்தாலும் மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா?.
பெண்கள் நீண்ட நேரம் பிரசவ வலியை அனுபவித்து பல மணி நேரங்களின் பின் தமது குழந்தையைப் பெற்றெடுக்கும் சாதாரண சுகப் பிரசவத்தையே தமக்குரிய தீர்வாக எதிர்பார்ப்பார்கள். அது மட்டுமின்றி இதன்போது தான் அவர்கள் முழுமையாக திருப்தி அடைகிறார்கள். ஆகையால் நாம் முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்கி அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் விருப்புகளுக்கும் ஏற்றவாறு சுகப் பிரசவத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் போதே எமக்கும் ஒரு திருப்தி நிலை ஏற்படுகின்றது. எனவே, இன்றைய கட்டுரையில் சிசேரியன் பிரசவங்களை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி ஆராய்வதோடு சிசேரியன் பிரசவங்களை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களையும் அறிந்து கொள்வோம்.
பிரசவத் திகதி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது?
கர்ப்பம் தரித்த பெண்களில் இறுதியாக மாதவிடாய் வந்த திகதியிலிருந்து 9 மாதங்களிலும் 7 நாட்களிலும் (40 வாரங்கள்) பிரசவ திகதி தீர்மானிக்கப்படும். சாதாரண பிரசவமாக இருந்தால் பிரசவ வலி இந்த 40 கிழமைகளின் முடிவில் ஒரு சில கிழமைகள் முன்னரோ அல்லது ஓரிரு வாரங்கள் பின்னரோ ஆரம்பிக்கும்.
40 வார கால முடிவில் வழங்கப்பட்ட எதிர்பார்ப்புத் திகதியில் பிரசவ வலி வரவில்லையென சிசேரியனைப் பற்றி சிந்திக்காமல் நாம் மேலும் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்து அதாவது 41 வார காலம் வரை காத்திருக்கும் போது கூடுதலானவர்களில் பிரசவ வலி ஏற்பட்டு சாதாரண பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஏதாவது காரணங்களுக்காக சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தால் 38 – 39 வாரங்கள் முடிந்த பின்னர் சிசேரியன் மேற்கொள்ளும் போதே குழந்தை சிக்கல்கள் எதுவுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் ஏதாவது காரணங்களுக்காக குறைந்த வாரங்களில் சிசேரியன் மேற்கொள்ளும் போது நாம் ஒரு விடயத்தை சிந்திக்க வேண்டும். அதாவது பிரசவத்தின் பின் குழந்தையின் ஆரோக்கியத்தில் குறைகள் இருந்து மேலும் சில நாட்கள் குழந்தை வைத்திய நிபுணரின் கண்காணிப்பில் குழந்தையை வைத்தியசாலையில் வைத்திருப்பது பெற்றோருக்கு வேதனையான விடயமே. எனவே பிரசவ திகதிக்கு சற்று முந்திய வாரங்களில் சிசேரியன் என்று தீர்மானிக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியம்.
தலை மேல் கால் கீழேயுள்ள சிசுவின் (Breech) பிரசவம் எவ்வாறு அமையும்?
கர்ப்ப காலத்தில் சிசு கர்ப்ப பையினுள் இருக்கும் விதம் ஒரு முக்கியமான விடயம். பெரும்பாலான சிசுக்கள் தலை கீழேயும் கால் மேலேயுமான நிலையிலேயே கர்ப்பப் பையினுள் அமைந்திருக்கும். இவ்வாறான சிசுக்களை வேறு மருத்துவ சிக்கல்கள் இல்லாதவிடத்து சாதாரண சுகப் பிரசவத்தின் மூலம் பிரசவிப்பது இலகுவானது. ஆனால் சிசுவின் தலை மேலேயும் கால் கீழேயும் உள்ள நிலையில் சாதாரண பிரசவம் சிக்கலானதாக அமையுமென்பதனை நாம் அறிய வேண்டும். இதனால் இவற்றை சிசேரியன் மூலம் பிரசவிக்கிறார்கள். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பிரசவத்திற்கு முன்னரே இவ்வகையான சிசுக்கள் கர்ப்பப் பையினுள் இருக்கும் விதத்தை கர்ப்பிணி ஒருவரின் வயிற்றை வைத்தியர் தனது கைகளால் அசைத்து தலை மேலேயுள்ள சிசுவை திருப்பி தலை கீழேயாக மாற்ற முடியும். அதன் பின்னர் இவர்களை சாதாரண சுகப் பிரசவத்திற்கு அனுமதிக்க முடியும். இந்த முயற்சி பெரும்பாலானவர்களுக்கு வெற்றி அளிக்கின்றது. இப்படியான முயற்சிகள் மூலம் சிசேரியன் பிரசவங்களின் அளவு குறைக்கப்படுகின்றது.
கர்ப்ப காலத்தின் இறுதிப் பகுதியில் உயர்குருதியமுக்கம் ஏற்பட்டால் பிரசவம் எவ்வாறு அமையும்?
கர்ப்ப காலத்தின் இறுதிப் பகுதியில் உயர் குருதியமுக்கம் (High Blood Pressure) ஏற்படும் போது ஒரு நிலையில் பிரசவமே இதற்குத் தீர்வாக அமைகின்றது. இந்தப் பிரசவம் கட்டாயம் சிசேரியனாகத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல. முதலில் நாம் அவர்களுக்கு சாதாரண பிரசவத்தை முயற்சிக்க வேண்டும். இது கூடுதலானவர்களுக்கு வெற்றியளிக்கின்றது. ஆனால் சாதாரண பிரசவம் தோல்வியடைந்தால் அல்லது தாமதமடைந்தால் சிசேரியன் பிரசவம் பற்றி சிந்திக்கலாம்.
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் (Diabetes) ஏற்படின் பிரசவம் எவ்வாறு அமையும்?
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படும்போது பிரசவ திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன் பிரசவம் மேற்கொள்ள வேண்டும். இதன் போது தான் சிசுவிற்கு இறுதி நேரத்தில் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைகளை தவிர்க்க முடியும். இதற்காக நீரிழிவு நோயுடைய பெண்களுக்கு பிரசவம் கட்டாயம் சிசேரியனாகத்தான் இருக்க வேண்டியதில்லை. சாதாரண சுகப் பிரசவமும் முடியும். முதலில் சாதாரண சுகப் பிரசவத்திற்கு முயற்சித்து இது வெற்றியளிக்காவிடில் சிசேரியன் மேற்கொள்ளலாம்.
ஒருமுறை சிசேரியன் மேற்கொள்ளப்பட்டவருக்கு அடுத்த பிரசவம் எவ்வாறு அமையலாம்?
ஒருமுறை சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் அடுத்த முறை கர்ப்பந்தரிக்கும் போது இம்முறையும் கட்டாயம் சிசேரியன் பிரசவமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.
முதல் முறை என்ன காரணத்திற்காக சிசேரியன் மேற்கொள்ளப்பட்டது என்பதை பொறுத்து அடுத்த பிரசவத்தை தீர்மானிக்கலாம். அதாவது தாயின் இடுப்பு சிறிது என்பதற்காக முதல் முறை சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இம்முறையும் சிசேரியன் தான் மேற்கொள்ள வேண்டி வரும். வேறு காரணங்களுக்காக கடந்த முறை சிசேரியன் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இம்முறை சாதாரண பிரசவத்திற்கும் வாய்ப்புள்ளது.
நீண்டகாலம் குழந்தைப் பாக்கியம் தாமதமடைந்து கருத்தரித்தவர்களுக்கு எவ்வாறான பிரசவம் உகந்தது.
நீண்டகாலம் குழந்தைப் பாக்கியம் தாமதித்து கருத்தரித்தவர்களில் வேறு எந்தச் சிக்கலும் கர்ப்ப காலத்தில் இல்லாதவிடத்து சாதாரண பிரசவம் முடியும். ஆனால் பெண்கள் தமது தனிப்பட்ட விருப்பத்திற்கமைய சிசேரியனை தீர்மானித்தால் அதனை மேற்கொள்ள முடியும்.
எனவே பெண்களே! பிரசவ முறைகள் எவை? அவற்றில் உங்களுக்கு பொருத்தமான முறை என்ன? என்பவற்றை உங்களைப் பராமரிக்கும் வைத்திய நிபுணருடன் கலந்தாலோசித்து உங்கள் விருப்பு வெறுப்புகளை தெரிவித்து அவரிடமிருந்து தகுந்த விளக்கங்களைப் பெற்று தெரிவு செய்ய வேண்டும். இதன் போது தான் பிரசவத்தின் போது தாயின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் என்பன பேணப்படும்.