தலைவா படத்தை நிபந்தனை அடிப்படையில் 23ம் திகதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!!

284

Thalaiva-Movie-Updates

விஜயின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23ம் திகதி வெளியிடலாம் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 9ம் திகதி உலகமெங்கும் வெளியாகிவிட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டிவிடிகள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார்.

திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜயும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்புக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் திரையரங்குகள் விருப்பம். அரசையோ முதல்வரையோ இதில் தொடர்பு படுத்தக் கூடாது என தலைவா படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

எனவே இனி படத்தை வெளியிடுவது திரையரங்க உரிமையாளர்களின் கையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் தங்கள் சங்க அலுவலகத்தில் கூடிய திரையரங்கு உரிமையாளர்கள் தலைவா படத்தை வரும் 23ம் திகதி வெளியிடலாமா என ஆலோசித்தனர்.

ஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்துக்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால் விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர்.

250 முதல் 300 அரங்குகளில் சதவீத அடிப்படையில் வேண்டுமானால் தலைவாவை வெளியிடலாம். மினிமம் கரண்டி அடிப்படையில் என்றால் படத்தை வெளியிட முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால் தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகக் கூடும்.