மதம் மாறியதால் சொந்த மகளையே அடித்துக் கொலை செய்த தாய் கைது!!

993

Murder

இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தனது மகளை அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 21 வயதான செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குற்றத்தினை ஒப்புக்கொண்ட கொலை செய்யப்பட்டவரின் தாயார் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் ஐந்தாவது பிள்ளையான செல்வநாயகம் ஜனனி திருமணம் முடித்து கணவன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

தனது கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தினை தழுவி வந்த ஜனனி கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 31ஆம் திகதி தனது தாயாரின் வீட்டிற்கு வந்த ஜனனிக்கும், தாய்க்கும் இடையில் மதம் மாறியமை தொடரிபில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது கட்டில் பலகையினை கொண்டு தாய் தாக்கியதையடுத்து ஜனனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த மகளின் உடலை தனது வீட்டிற்கு பின்பகுதியில் உள்ள நிலத்தில் புதைத்ததுடன், தனது மகளை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தனது குற்றத்தினை ஒத்துக்கொண்ட தாய், இச்சம்பவத்தினை பொலிஸாருக்கு வாக்குமூலமாகவும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபரை இன்று மாலை கைது செய்துள்ள பொலிஸார், சடலத்தினை தோண்டுவதற்காக நீதிமன்ற அனுமதியினை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர்.