டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார்.
டெக்சாஸைச் சேர்ந்த ஜொனி பிளெட்சர் கூடன் ஜுனியர் (29) என்பவர் பிரையனில் உள்ள சேஸ் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி ஊழியரிடம் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலின் வளர்ப்பு மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
மிஷலின் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அவர் கேட்டுள்ளார். வங்கி ஊழியருக்கு ஜொனி பொய் சொல்கிறார் என்று தோன்றியதால் அவரை வங்கியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
மிஷலுக்கு இந்த வங்கியில் கணக்கு இல்லை என்று கூறியும் அவர் வெளியே செல்ல மறுக்கவே பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பொலிசாரிடம் அவர் கூறுகையில் மிஷல் என்னை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு தத்தெடுத்துக் கொண்டார்.
அதனால் தான் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வந்தேன் என்றார். ஆனால் பொலிசார் கேட்ட கேள்விகளுக்கு ஜொனியால் பதில் கூற முடியவில்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பிராஸோஸ் கவுன்ட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.