சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து எகிப்து தலைநகரான கெய்ரோவை நோக்கி இன்று சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
118 பயணிகள் மற்றும் விமானி உள்பட 17 பணியாளர்கள் என மொத்தம் 135 பேருடன் வந்த அந்த விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள உர்கென்ச் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த விமானம் எகிப்து ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரியவந்துள்ள நிலையில், விமானத்தில் இருந்த அனைவரும் அவசர வாசல் வழியாக கீழே இறக்கப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.