தலைவா பட விவகாரம் : நடிகர் விஜய், அமலாபால் உள்ளிட்ட படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு!!

301

thalaivaa

நடிகர் விஜய், அமலபால் ஜோடியாக நடித்து, இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் தலைவா. இந்த படத்தை வெளியிட்டால் திரை அரங்குகளில் குண்டு வைப்போம் என்று ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்ததன் காரணமாக படம் குறிப்பிட்ட திகதியில் வெளியாவது தடைபட்டது.

இருப்பினும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தலைவா’குறிப்பிட்ட திகதியில் வெளியானது. இதனால், இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன. இதனால் படக்குழுவினர் பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை காவல்துறை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தலைவா திரைப்படம் கடந்த ஆக 9ம் திகதி உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ஆனால் திரையரங்குகளுக்கு வந்த மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் தலைவா திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் மட்டும் தடைசெய்யப்பட்டு திரைக்கு வெளிவராத சூழல் அமைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை தவிர உலகமெங்கும் வெளியான காரணத்தினால் தலைவா திரைப்படம் அனுமதியின்றி இணையதளத்திலும், விசிடி வழியாகவும் தமிழகமெங்கும் புற்றீசல் போல பரவி உள்ளது.

தமிழகத்தில் தலைவா திரைப்படம் வெளிவர பல வகையில் முயற்சித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால் தலைவா படத்தில் நடித்த நடிகர் விஜய், சத்யராஜ், அமலாபால் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தலைவா திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 திகதி அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.