பாகிஸ்தான் நாட்டில் காதலித்த நபருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்ட மகளை அவரது தாயார் உயிருடன் எரிந்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லாகூர் நகரில் பர்வீன் ரபீக் என்ற தாய் ஷீனட் ரபீக்(18) என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார். பெற்றோருக்கு தெரியாமல் ஹாசன் கான் என்ற வாலிபரை ஷீனட் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய ஷீனட் ஹாசனை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.மகளின் ஒழுக்கமற்ற நடவடிக்கையால் குடும்பத்தின் கெளரவம் கெட்டுவிட்டதாக பெற்றோர் மற்றும் ஷீனட்டின் சகோதரன் ஆகியோர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
சரியான நேரத்தை எதிர்ப்பார்த்திருந்த தாயார் 3 நாட்களுக்கு முன்னர் ஷீனட்டிற்கு ஒரு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், ‘எல்லாம் நடந்து முடிந்து விட்டது. ஆனால், நமது குடும்ப சம்பிரதாயப்படி உனக்கு விஷேடமான நிகழ்ச்சி நடத்த வேண்டும். எனவே, உடனடியாக வீட்டிற்கு புறப்படவும்’ என தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தாயார் மனம் மாறியுள்ளதை அறிந்து உற்சாகம் அடைந்த ஷீனட் புதிய கணவனை விட்டுவிட்டு அவர் மட்டும் தனியாக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டிற்குள் ஷீனட் நுழைந்ததும் அவரது கை கால்களை கயிற்றால் கட்டி தாயும் சகோதரனும் உள்ளே தூக்கி சென்றுள்ளனர். ஷீனட் அதிர்ச்சியில் அலறி துடித்துள்ளார்.உள்ளே சென்ற இருவரும் அங்குள்ள கட்டில் மீது ஷீனட்டை படுக்க வைத்து எழ முடியாமல் கட்டிபோட்டுள்ளனர்.
பின்னர், சமையல் அறையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து வந்து ஷீனட் மீது தாயார் ஊற்ற, அருகில் இருந்த சகோதரன் தீவைத்துள்ளார்.எதிர்கால கனவுகளுடன் தாய் வீட்டிற்கு வந்த ஷீனட் துடிக்க துடிக்க உடல் கருகி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் முடிந்ததும் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டு பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர்.பாகிஸ்தான் நாட்டில் மட்டும் சம்பிரதாயங்களை மீறி திருமணம் செய்துக்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000 பெண்கள் இதுபோன்று கொலை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.