சரியாக படிக்காததால் ஆசிரியர் மாணவர்களுக்கு காலில் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் வைஜெயந்திமாலா.
நான்காம் வகுப்பு படிக்கும் 13 மாணவ- மாணவிகள் சரியாக பள்ளிக்கு வரவில்லை, ஒழுங்காக படிக்கவில்லை என கூறி நேற்று அவர்களது காலில் கற்பூரத்தை வைத்து சூடுபோட்டுள்ளார்.
வலி தாங்காமல் மாணவர்கள் துடிதுடித்து கதறவே, வீட்டில் சொன்னால் நாளைக்கும் சூடு வைப்பேன் என மிரட்டியுள்ளார். இதனால் மாணவர்களும் தங்களது பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை.
இன்று காலை எழுந்தபோது கால்கள் புண்ணாகி இருந்தது, உடனே பெற்றோர்கள் வற்புறுத்தி கேட்டதும், மாணவர்கள் உண்மையை கூறியுள்ளனர்.
பதறி துடித்த பெற்றோர்கள் பள்ளிக்கூடம் சென்ற போது கூலாக பதிலளித்துள்ளார் வைஜெயந்திமாலா.
இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் ஆசிரியர் மீது பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வைஜெயந்திமாலா கைது செய்யப்பட்டார், இந்த விவகாரம் தொடர்பாக வைஜெயந்திமாலாவை பணிநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் தலைமை ஆசிரியர் வரதராஜன் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






