மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையும் அதன் சிறப்பம்சங்களும்!!

650

presidents-house

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காலங்களுக்குரிய கட்டடங்கள் கொழும்பு கோட்டையில் அமையப்பெற்றிருந்தாலும் ஜனாதிபதி மாளிகை முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த மாளிகை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமாகும்.

போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலங்களில் தேவாலயங்களாக இந்தக் கட்டடம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

18 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட கொழும்பு வரைபடத்திலும் இந்த கட்டடத் தொகுதியைக் காணக்கூடியதாகவுள்ளது.

ஒல்லாந்தர் ஆட்சியில் இருந்த ஆளுனர் ஜெராட் வென் அன்கல்பீக் புதிய கட்டடமொன்றை நிர்மாணித்ததுடன், அந்தக் கட்டடம் ஆளுனர் மாளிகையாகப் பெயரிடப்பட்டது.

பிரித்தானிய ஆட்சியில் இந்த மாளிகை பிரித்தானிய ஆளுனரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமாக அமைந்ததால், 1972 ஆம் ஆண்டு வரை கோட்டை ஜனாதிபதி மாளிகை, குயின்ஸ் ஹவுஸ் அல்லது ராணியாரின் இல்லம் என அழைக்கப்பட்டது.

ஆரம்பம் முதல் 32 ஆளுனர்களுக்கும் 7 ஜனாதிபதிகளுக்கும் வாசஸ்தலமாக அமைந்த இந்த மாளிகையை அவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் புனரமைப்பு செய்துள்ளனர்.

இந்த மாளிகையை முதற்தடவையாகப் பயன்படுத்திய இலங்கை ஆட்சியாளராக ஆளுனர் வில்லியம் கொபல்லாவ வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

அவர் இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாகப் பதவியேற்றதை அடுத்து ராணியின் மாளிகை ஜனாதிபதி மாளிகையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மாளிகை வளாகத்தில் இருக்கும் ஆல மரமும் நீண்ட வரலாற்றுக்கு உரித்துடையதாகும்.

விக்டோரியா மகாராணியார் பதவியேற்று 25 வருடங்கள் பூர்த்தியானபோது இலங்கையின் ஆளுனராக இருந்த சேர். ஜோசப் வெஸ்ட் ரிச்வேயின் சீமாட்டி இந்த மரத்தை நாட்டினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்கு வருகை தந்திருந்தனர்.

இங்குள்ள படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது வழமையாக ஜனாதிபதி வலது புறமாக பயணிக்கின்றார்.

வெளிநாட்டில் இருந்து வருகைதரும் அரச தலைவர்களும் வலது புறமாக இங்குள்ள படிக்கட்டுக்களைப் பயன்படுத்துவதுடன் ஏனைய அனைவரும் இடப்புறத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஜனாதிபதி மாளிகையிலுள்ள பௌத்த வழிபாட்டுத் தலத்தில் புராதன ஓவியங்கள் பலவற்றைக் காணக்கூடியதாகவுள்ளது.

பிரித்தானிய ஆட்சியின் கீழ் இந்த மாளிகை நிர்மாணிக்கப்பட்ட போது, மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அங்கு காணப்படுகின்ற மர வேலைப்பாடுகளும் இலங்கையின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கின்றன.

மண்டபத்தில் இருக்கும் விருந்துபசார பொருட்களும் பிரித்தானிய ஆட்சிக்குரியவை.

அக்காலத்தில் ஆளுனர் உணவு மேசைக்கு வருகை தந்து விருந்தை உண்ண ஆரம்பித்ததும் இங்கு மணியோசை எழுப்பப்பட்டது.

சில காலத்திற்கு முன்னர் மக்களின் பயன்பாட்டிற்காக மாளிகைக்கு பின்புறத்தில் திறந்து வைக்கப்பட்ட கோடன் பூங்காவும் ஜனாதிபதி மாளிகையின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது.

ஜனாதிபதி மாளிகையுடன் அண்மையில் சேர்க்கப்பட்ட பகுதியாக நிலத்தடி மாளிகை விளங்குகிறது.

பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஜனாதிபதி மாளிகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை, இரவு 7 மணி வரை மக்கள் பார்வையிட முடியும்.