சென்னையில் தொடர்ந்து அச்சுறுத்தும் இராட்சத கடல் அலைகள் : தூக்கமின்றி தவிக்கும் மக்கள்!!

911

Chennai

சென்னை பட்டினப்பாக்கத்தில் தொடர்ந்து மீனவர்களை இராட்சத அலைகள் அச்சுறுத்தி வருகின்றன. உயிர் பயத்தில் இரவில் தூக்கம் இன்றி அவர்கள் தவிக்கின்றனர்.

தென்மேற்கு திசையில் இருந்து aவீசும் காற்றின் வேகம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதால் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை உள்பட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காட்சி அளிக்கிறது. குறிப்பாக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

மணற்பரப்பை தாண்டி குடியிருப்புகளுக்குள் கடல் தண்ணீர் புகுந்து வருகிறது. கடல் சீற்றத்தால் சேதமடைந்த வீடுகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் நேற்றுமுன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் நேற்று கடல் சீற்றம் வழக்கத்தை விட கூடுதலாக காணப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கூறியதாவது:-

காலை மற்றும் நேரங்களில் தான் கடல் ஆவேசத்துடன் காட்சி அளிக்கிறது. மதிய வேளையில் சாந்தமாக காணப்படுகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் இராட்சத அலைகள் சீறி பாய்ந்து குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன.

இதன் காரணமாக இரவு நேரத்தில் தூக்கம் இன்றி தவித்து வருகிறோம். எங்களுடைய வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தான் எங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீடுகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு மாநகராட்சி சார்பில் 2 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியிலும் நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அவ்வப்போது இராட்சத அலைகள் எழுந்தன. கடல் காற்றும் பலமாக வீசியது.