தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சந்தானம். தற்போது இவர் கதாநாயகனாவும் அவதாரம் எடுத்து, அதிலும் வெற்றி கண்டு வருகிறார். சினிமாவில் வெற்றிவாகை சூடி வரும் சந்தானத்தின் நிஜவாழ்க்கையில் தற்போது ஒரு சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
சந்தானத்தின் தந்தை நீலமேகன் நேற்று முன்தினம் மாலை உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62.
சந்தானத்தின் சொந்த ஊர், சென்னைக்கு அருகில் உள்ள பொழிச்சலூர் ஆகும். எனவே, அவரது தந்தையின் உடல் சொந்த ஊரான பொழிச்சலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. சந்தானம் தந்தையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.











