யாழ். இணுவில் பகுதியில் உள்ள வீட்டுக்குள் கடந்த திங்கட்கிழமை இரவு நுழைந்து திருட முற்பட்ட திருடனை அவனது கைத்தொலைபேசி காட்டிக் கொடுத்துள்ளது.
அதனையடுத்து, குறித்த சந்தேக நபரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக தனது கைத்தொலை பேசியில் இருந்த விளக்கின் (லைட்) ஊடாக வீட்டிலிருந்த பொருட்களை பார்த்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தால் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட கையில் வைத்திருந்த கைத்தொலைபேசியை தவறவிட்டு விட்டு திருடன் தப்பித்து ஓடியுள்ளான்.
கைத்தொலைபேசியை மீட்ட வீட்டு உரிமையாளர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அதனை ஒப்படைத்துள்ளனர்.
அதனையடுத்து, கைத் தொலைபேசியை சோதனை செய்த பொலிஸார், கந்தரோடை விகாரையடி பகுதியைச் சேர்ந்த 32 வயதான சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.