ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாளை மட்டக்களப்பில் போராட்டம்!!

706

boycott
ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கையெழுத்து போராட்டம் நாளை (17) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியின் கீழ் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டித்துள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளை அச்சம் இன்றி மேற்கொள்ளும் நிலையினை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் நீர்கொழும்பு மாநகரசபைக்குள் வைத்து ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கான பின்னணியில் உள்ளவரை கைதுசெய்யவதற்கான நடவடிக்கையினை பாதுகாப்பு தரப்பினர் இதுவரை மேற்கொள்ளவில்லையெனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

எனவே தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக்கோரியும் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00மணியளவில் காந்தி பூங்கா முன்னிலையில் கையெழுத்து போராட்டம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

எனவே இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடக அமைப்புகள், மகளிர் அமைப்புகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை வழங்குமாறு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.