நடுக்கடலில் உணவின்றி தவித்து வரும் 44 இலங்கை அகதிகள் : கருணை காட்டுமா அவுஸ்திரேலியா?

320

Refugees

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி படகில் பயணம் செய்த 44 இலங்கை அகதிகள் கடந்த 20 நாட்களாக நடுக்கடலில் ஆபத்தில் சிக்கி போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்தம் ஏற்பட்டபோது உயிருக்கு அஞ்சிய பலர் அகதிகளாக இந்தியா நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.

இவர்களில் ஒரு கர்ப்பிணி பெண், 9 குழந்தைகள் உள்ளிட்ட 44 பேர் இந்தியாவிலிருந்து படகு மூலமாக வெளியேறி அவுஸ்திரேலியாவில் புகலிடம் எதிர்ப்பார்த்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ளனர்.

இரவு, பகலாக பயணமான இந்த படகு இந்தோனேஷியாவில் உள்ள Aceh என்ற கடற்பகுதிக்கு அருகில் வந்தபோது மோசமான வானிலை காரணமாக படகு சேதம் அடைந்துள்ளது.

கடந்த 20 நாட்களாக அவுஸ்திரேலியா அல்லது இந்தோனேஷியா அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் படகில் இருந்த இரு இளைஞர்கள் கடலில் குதித்து இந்தோனேஷியா கடற்கரைக்கு செல்ல முயன்றுள்ளனர். ஆனால், இருவரையும் கைது செய்த இந்தோனேஷியா கடற்படை அவர்களை மீண்டும் அவர்களின் படகிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

நடுக்கடலில் உணவின்றி தவித்து வரும் இலங்கை அகதிகளுக்கு ஆதரவாக ஐ.நா சபை அண்மையில் இந்தோனேஷியா அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்தோனேஷியா துணை ஜனாதிபதியான Jusuf Kalla தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை அதிகாரிகள் ஒரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், ‘நடுக்கடலில் இருக்கும் இலங்கை அகதிகளை இந்தோனேஷியா கடற்கரைக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் படகு பழுது பார்க்கப்பட்டு, உணவு மற்றும் பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் திருப்பி இந்தியா நோக்கி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அகதிகள் இந்தியாவை அடையும் வரை அவர்களது படகை சுற்றி பாதுகாப்பிற்கு இந்தோனேஷியா கடற்படையினர் செல்லுவார்கள் எனவும் இந்தோனேஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த நடவடிக்கை எப்போதும் மேற்கொள்ளப்படும் என்ற திகதியை அவர்கள் அறிவிக்கவில்லை.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சென்றவர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெளனம் சாதித்து வருவது நடுக்கடலில் தத்தளித்து வரும் 44 பேரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.