புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா நேற்று (16.06.2016) கல்லுரியின் அதிபர் திரு.ரவீந்திரராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்கள் மாணவர்களின் இனியம் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகின.
தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இணைந்து திறந்துவைத்தனர்.
இதில் சிறப்புரையை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வழங்கினார். அவர் தனதுரையில்..
இன்று இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு ஆய்வு கூடத்தினை திறந்துவைப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. எமது பிரதேசம் கொடிய யுத்தத்தின் மூலம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. எமது மண்ணில் மீண்டும் தமது சொந்த முயற்சியில் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஒவ்வொரு கல்விமான்களும் உழைக்கின்றனர்.
ஒரு தமிழன் என்ற வகையிலும் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுக்க போராடி துணை ஆசிரியர் என்ற நியமனம் பெற்றுக்கொடுத்து வெற்றி பெற்றவர் கல்வி இராஜாங்க அமைச்சர். எனவேதான் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க ஆவண செய்யவேண்டும்.
அது போன்று நீண்ட காலமாக முன்பள்ளிகளில் சிறு வேதனத்துடன் கல்வி கற்பிக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும்.
சிவில் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினரின் தலையீடுகள் நிறுத்தப்பட்டு கல்வித் திணைக்களங்களிடம் முன்பள்ளிகள் ஒப்படைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.













