நாமக்கல்லில் இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதி ஆணவத்தின் காரணமாகவே, இந்த கொலை நடந்திருப்பதாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வேலூரைச் சேர்ந்த சாந்தி என்பவரும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் காதலித்து கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தை சுமதியின் பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில், சந்தோஷின் பெற்றோர் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், சந்தோஷூம், சுமதியும் நாமக்கல்லில் தனியாக வசித்து வந்துள்ளனர். வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த சந்தோஷ், ஒசூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், நாமக்கல்லில், சுமதி தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சாந்தி நேற்று பிணமாக கிடந்தார்.
அவரது வீட்டிற்கு, சந்தோஷின் தாயார் வந்ததாகவும், அதனைத் தொடர்ந்தே சுமதி கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமதியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாதி ஆணவத்தின் காரணமாகவே கொலை நடந்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, சந்தோஷ்-சுமதி திருமணத்தை, சந்தோஷின் பெற்றோர் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு நாளை திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார், சந்தோஷ் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






