சென்னையில் ரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் வெட்டிக் கொலை!!

965

1

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை மனதை பதறவைக்கும் வகையில் இளம்பெண் பொறியியலாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மின்சார ரயில்கள் செல்லும் நடைமேடையில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இன்று காலை 6.30 மணி அளவில் ரயிலுக்காக காத்திருந்தார்.

ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தபடியே அந்த இளம்பெண், ரயிலின் வருகையை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டே இருந்தார்.

அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அங்கு வந்தார். அவர் நேராக சென்று இளம்பெண்ணிடம் பேசினார். பேச ஆரம்பித்த உடனேயே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இளம்பெண் கோபத்துடன் ஏதோ பேசினார். இதனால் வாக்குவாதம் முற்றியது. இதை தொடர்ந்து இளம்பெண் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றார்.

இந்த நேரத்தில் இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெரிய பட்டாக் கத்தியை எடுத்து திடீரென இளம்பெண்ணை வெறிபிடித்தவர் போல வெட்டினார்.

இதில் அப்பெண்ணின் கழுத்து, தாடை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. இரத்தம் பீரிட்டு வந்தது. இதனால் நிலை குலைந்து போன அப்பெண், சம்பவ இடத்திலேயே சத்தம் ஏதும் போடாமலேயே மூச்சடங்கி போனார்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்ட இக்கொடூர கொலை சம்பவத்தை அங்கிருந்த பயணிகளால் தடுக்க முடியவில்லை.

2

கொலையாளியின் கையில் நீளமான கத்தி இருந்ததால், பயந்துபோய் அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர். யாரும் அருகில் செல்லவில்லை. பீதியில் உறைந்த பயணிகள் பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனால் இளம் பெண்ணை கொன்ற இளைஞர் எந்தவித தடங்கலுமின்றி இரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் எழும்பூர் ரயில்வே பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்தில் பெண்ணின் கைப்பை கிடந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்தனர். அதில் அடையாள அட்டை இருந்தது. அதனை வைத்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரது பெயர் சுவாதி (வயது 24). சென்னை சூளைமேடு தெற்கு கங்கையில் வசித்து வந்தார். தந்தை பெயர் கோபாலகிருஷ்ணன். கணணிப் பொறியியலாளரான சுவாதி செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

தினமும் காலை 6 மணி அளவில் சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்படும் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலமாக பணிக்கு செல்வது வழக்கம்.

இன்று காலையிலும் வழக்கம் போல தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சுவாதி ரயில் நிலையத்துக்கு வந்தார். கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலுக்காக காத்திருந்தபோதுதான் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுவாதியை கொலை செய்த இளைஞர் திட்டம் போட்டு அவரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. காதல் தகராறு காரணமாகவே இக்கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேக்கிறார்கள்.

அது தொடர்பாகவே பொலிஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. சுவாதியை கொலை செய்த வாலிபர், ஒருதலையாக அவரை காதலித்து வந்திருக்கலாம் என்றும் தனது காதலை ஏற்க மறுத்ததால் அவர் சைகோவாக மாறி சுவாதியை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கொலையாளி யார் என்பது தெரியவில்லை. அவரை தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

சுவாதி கொலை தொடர்பாக எழும்பூர் ரயில்வே பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் அவர்கள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

சுவாதி பணிபுரியும் நிறுவனத்தில் அவருக்கு நெருக்கமான தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுவாதியின் கைபேசியை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், கொலையாளியின் கைபேசி எண் உள்ளதா? என்பது பற்றியும் பொலிசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதன் மூலமாக சுவாதியை கொலை செய்த வாலிபரை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும், விரைவில் கொலையாளியை கைது செய்து விடுவோம் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலை 6.30 மணி அளவில் கொலையுண்ட சுவாதியின் உடல், 8.30 மணிக்கு பிறகே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதுவரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே சுவாதியின் உடல் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது.

அருகில் நடைமேடையில் இரத்தமும் வழிந்தோடி காணப்பட்டது. இதனை பயணிகள் பீதியுடன் பார்த்துச் சென்றனர்.

இதைப் பார்த்து சுவாதியின் தந்தை கோபாலகிருஷ்ணன் எனது மகளை இப்படி கண்காட்சி மாதிரி ஆக்கிட்டாங்களே என்று கூறி கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இக்கொலை சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.