ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் அவர் பதவி விலகவுள்ளார்.
இரண்டு உலகப்போர்களால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பாக் கண்டத்தில் நிரந்தர அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 நாடுகள் இணைந்து ‘ஐரோப்பிய பொருளாதார சமூகம்’ என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை 1958 ஆம் ஆண்டு உருவாக்கின.
இந்த அமைப்பில் 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்தும் உறுப்பு நாடாக இணைந்தது.
1993 ஆம் ஆண்டு, இந்த அமைப்பின் பெயர் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என மாற்றியமைக்கப்பட்டது. இதில் தற்போது 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக்காலத்தில் வலுப்பெற்றது.
இதனால், அது தொடர்பில் நாட்டு மக்களிடையே நேற்று பொது வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
வாக்கெடுப்பின் முடிவில் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என மக்கள் விரும்புகின்றமை தெரியவந்துள்ளது.
அண்ணளவாக 52 சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனையடுத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.






