ரயில் நிலையத்தில் இப்படி ஒரு கொலை சம்பவம் இதுவரை நடந்தது இல்லை என்றும், சுவாதியை கொலை செய்த குற்றவாளியை நிச்சயம் பிடித்துவிடுவோம் என்றும் ரயில்வே பொலிஸ் டி.ஐ.ஜி. தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த இடத்தை தமிழ்நாடு ரயில்வே பொலிஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன் நேற்று பார்வையிட்டு இந்த கொலை தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
சுவாதி கொலை ஏதோ 4 பேரோ அல்லது நிறைய பேர் சேர்ந்தோ செய்தது இல்லை. ஒரே ஒருவன் தான் இந்த கொலையை செய்திருக்கிறான்.
அவன் இந்த பெண்ணிடம் வந்து பேசுகிறான். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து வெட்டுகிறான்.
வாள் வீச தெரிந்தவன் போல வெட்டி இருக்கிறான்.இது திட்டமிட்ட கொலை தான்.
வெட்ட வந்தவன் கூலிக்காக கொலை செய்தானா? அல்லது சுவாதியை ஒருத்தலையாக காதலித்தானா? என்பது தெரியவில்லை. அவனுடைய புகைப்படம் கிடைத்து இருக்கிறது. நிச்சயமாக அவனை பிடித்துவிடுவோம்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் எப்போதும் தீவிரமாக செய்து வருகிறோம்.
பயணிகள் அதிகம் கூடும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய ரயில் நிலையங்களில் எப்போதும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள்.
இந்த ரயில் நிலையம் பயணிகள் அவ்வப்போது வந்து போகும் இடம் தான். இப்படி ஒரு கொலை சம்பவம் இங்கு நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பொதுவாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தை தாண்டி தான் இதுபோல் கொலைகள் நடக்கும்.மற்றபடி, ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் நடக்கும்.
2014-ல் ரயில் நிலையத்தில் ஒரு கொலை நடந்தது. அந்த குற்றவாளியை 2 நாட்களில் கண்டுபிடித்துவிட்டோம்.






