தனியார் போக்குவரத்துச் சேவைகள் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ள நிலையில் வவுனியாவில் தனியார் பேரூந்துகள் எவையும் சேவையில் ஈடுபடுத்தப் படாமையினால் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள், மக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேரூந்திற்கு 60 வீதமும், இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேரூந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது.
எனினும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசுடனும், மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் குற்றம்சுமத்தப்பட்டள்ளது.























