டைட்டானிக் கப்பலிற்கு கையாண்ட உத்தி மூலம் மலேசிய விமானம் தேடல்!!

671

Flight

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் திகதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி வருகின்றன.

இதைப்போல மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடி மீட்கும் பணியிலும் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து பிங் எனப்படும் சமிக்ஞைகள் கடந்த 8ம் திகதி கிடைத்ததால், கறுப்பு பெட்டியை விரைவாக மீட்கும் நோக்கில் அமெரிக்காவின் புளூபின்-21 என்ற நீர்மூழ்கி ரோபோ ஈடுபடுத்தப்பட்டது.

இந்த ரோபோ 10 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்த பிறகும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீட்புக்குழுவினர் விரக்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக பனிப்பாறை மீது விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் தேடி கண்டுபிடித்த தேடுதல் யுக்தியை மலேசிய விமானத்தை தேடும் பணியில் கையாள அவுஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது.

டைட்டானிக் கப்பலை தேடிக் கண்டுபிடித்த ஸைட் ஸ்கேன் ஸோனார் தொழில்நுட்ப உதவியுடன் ஆழ்கடல் பகுதியில் அடுத்தகட்ட தேடுதல் பணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் டேவிட் ஜான்ஸ்ட்டன் இன்று தெரிவித்துள்ளார்.

மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்பாக கடந்த மாதம் கருத்து தெரிவித்திருந்த அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், மலேசிய விமானத்தை தேடும் பணி வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டதல்ல. ஆனால், அந்த விமானத்தின் பாகங்களை தேடும் பணியை தவிர்த்துவிட இயலாது.

ஏகப்பட்ட கழிவுகள் மிதக்கும் அந்த கடல் பகுதியில் விமானம் சம்பந்தப்பட்ட பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது உறுதிபடும் வரை அனைத்து ஆற்றலையும் செலவிட்டு, எங்கள் தேடுதல் வேட்டை தொடரும். நாங்கள் தேடிக் கொண்டே இருப்போம்.

இது மக்களுக்கு நாங்கள் பட்ட கடன். இந்த புதிருக்கான விடையை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டியது எங்களது கடமையுமாகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.