தனது காதலர் கிழங்குப் பொரியல் (சிப்ஸ்) முழுவதையும் உட்கொண்டுவிட்டார் என்ற ஆத்திரத்தில் காதலரை பெண்ணொருவர் கத்தியால் குத்திய சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
லன்காஷயர் பிராந்தியத்தின் பிளக்பர்ன் நகரைச் சேர்ந்த 34 வயதான டியென் மார்கரெட் கிளேட்டன் எனும் பெண், தனது காதலர் சிமோன் ஹில் சகிதம் தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
அவ் வீட்டில் தம் இருவருக்கும் வழங்கப்பட்ட கிழங்குப் பொரியல் முழுவதையும் தனது காதலர் உட்கொண்டமை தொடர்பாக அவருடன் டியென் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதம் முற்றியநிலையில், காதலர் சிமோன் ஹில்லை, டியென் கத்தியால் குத்தினார். இதனால் சிமோன் ஹில்லின் தோளில் காயம் ஏற்பட்டது.
அவ் வேளையில் டியென் மதுபோதையில் இருந்தார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் டியென் மார்கரெட்டுக்கு 26 வார சிறைத் தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.