நைஜீரியாவில் தீவிரவாதிகளின் முகாமிற்கு பதிலாக அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு : 100 பேர் பலி!!

506

நைஜீரியாவில் தீவிரவாதிகள் முகாமிற்குப் பதிலாக அகதிகள் முகாமில் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் 100 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கேமரூன் நாட்டு எல்லையை ஒட்டிய பகுதியான ரானில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நைஜீரிய இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், நைஜீரிய விமானப்படை நேற்று (17) அப்பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால், தீவிரவாதிகள் முகாமிற்கு பதிலாக அகதிகள் தங்கியிருந்த முகாமில் இந்த குண்டு வீச்சு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

இதில், அகதிகள், பொலிஸார், மருத்துவ உதவியில் ஈடுபட்டிருந்தவர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இது தவறுதலாக நடந்த தாக்குதல் சம்பவம் என முதன்முறையாக நைஜீரிய இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.