செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை 100 ஆண்டுகளில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அமீரகத்தின் துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இவ்விருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
உலகில் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து செயற்பாட்டிற்கு வரும். இங்கு வசிக்கும் மக்களை இதே வசதிகளுடன் செவ்வாய் கிரகத்தில் தங்க வைத்து, அங்கும் ஓர் உயிரின வாழிடம் ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
மனிதனுடைய குறிக்கோள்களுக்கு எல்லையில்லை. கனவாக உள்ள அனைத்தையும் நிறைவு செய்யும் வாய்ப்பு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிக நீண்ட திட்டமாகும். அடுத்து வரும் தலைமுறைகள் இந்த பலனை அனுபவிப்பார்கள். இந்த திட்டம் அமீரகத்தில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு படிப்படியாக கட்டமைக்கப்படும்.
பூமிக்கு அடுத்தபடியாக மனிதர்கள் வாழ குறைந்தபட்ச தகைமைகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளன. இதில் குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலை 63 டிகிரி செல்சியசாக உள்ளது. ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் ஆகும். இங்கு பூமியில் இருந்து 2021 ஆம் ஆண்டு மனிதர்கள் சென்று ஆய்வு நடத்தவுள்ளார்கள். இதற்காக அமீரகம் சார்பிலும் ஒரு விண்கலம் உருவாக்கப்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த செவ்வாய் கிரக நகரமைப்புத் திட்டத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.