துப்பாக்கி முனையில் திருமணம் : தாய் மண்ணை தொட்டு கும்பிட்டு நாட்டிற்குள் நுழைந்த பெண்!!

298

பாகிஸ்தானை சேர்ந்த நபரை நம்பி அந்நாட்டிற்கு சென்ற பெண் பல்வேறு துயரங்களுக்கு பின்னர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.

டெல்லியை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த தாகிர் அலியை மலேசியா சென்ற போது காதலித்தார்.

கடந்த 1–ந் திகதி உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு துப்பாக்கி முனையில் வைத்து, உஸ்மாவை தாகிர் அலி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் தான் அலியின் உண்மை முகம் உஸ்மாவுக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்திய தூதரகத்தை நாடிய உஸ்மா, தாகிர் அலி ஏற்கனவே திருமணம் ஆனவர், 4 குழந்தைகளுக்கு தந்தை, அவற்றையெல்லாம் என்னிடம் மறைத்துவிட்டார்.

எனது ஆவணங்களையும் கிழித்துபோட்டு என்னை உடல்ரீதியாக கொடுமைப்படுத்துகிறார் என தன்னுடைய நிலை குறித்து எடுத்துரைத்துள்ளார்.

மேலும், நான் எனது நாட்டிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என தூதரகம் உதவியுடன் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், உஸ்மா இந்தியா திரும்ப நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் அவர் வாகா எல்லையை அடையும் வரையில் பாகிஸ்தான் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அட்டாரி- வாகா எல்லையின் வழியாக இன்று இந்தியாவிற்குள் நுழைந்தவர், இந்திய மண்ணை தொட்டு கும்பிட்டார்.

இந்திய அரசு தங்களுக்கு முழு உதவியையும் செய்ததாக உஸ்மாவின் சகோதரர் கூறியுள்ளார்.