மாணவன் கடத்தல் : சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

575

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தன்னிடம் இருந்த 3 கோடி ரூபாய் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி செய்து வந்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு புரோக்கர்களை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தர், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் என்ற புரோக்கர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் இந்த செல்லாத பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றித் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் 10 லட்சம் ரூபாய் கமிஷன் கேட்டுள்ளனர். இதற்கு பால்ராஜ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புரோக்கர்கர்கள் இருவரும், பால்ராஜை தொடர்பு கொண்டு, உடனடியாக 3 கோடி ரூபாய் பணத்தை எடுத்து வருமாறு எனவும், நெல்லையில் உள்ள ஒரு நபர் மூலம் பணத்தை மாற்றி விடலாம் என்று கூறியுள்ளனர்.

இதனால் பணத்தை மாற்றுவதற்காக பால்ராஜ் புரோக்கர் கூறிய இடத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கும்பல் ஒன்று பால்ராஜ் கொண்டு வந்திருந்த 3 கோடி ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளது.

அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக புரோக்கரான ஜெயபாலுக்கு போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது.

சந்தேகமடைந்த அவர் ஜெயபால் வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கில்லை. அதன் பின் இந்த சம்பவத்தில் ஜெயபாலுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து ஆத்திரமடைந்த அவர் உடனடியாக ஜெயபாலின் மகனை தனது நண்பர்கள் உதவியுடன் காரில் கடத்தியுள்ளார்.

இதை அறிந்த ஜெயபால் அவருக்கு தொடர்பு கொண்டபோது, பணத்தை கொடுத்தால் மகனை விட்டு விடுவதாக கூறியுள்ளார். உடனடியாக ஜெயபால் தனது மகன் கடத்தப்பட்டதாக கூறி அங்கிருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பொலிசாரின் சாமர்த்திய செயலால் மாணவன் சுரேஷ் கடத்தப்பட்ட கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டான்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பொலிசார் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செல்லாத பணத்தை மாற்ற நடந்த முயற்சி பற்றி தெரியவந்ததால், நெல்லை டவுன் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.