இளஞ்சிவப்பு நிறத்தில் உருமாறும் ஏரி : காரணம் என்ன?

555

 
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏரி நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் அங்குப் பார்வையாளர்களின் கூட்டம் குவிகிறது.

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள என்செங் நகரத்தில் மிகப் பெரிய உப்பு ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள தண்ணீர் மிகவும் உவர் தன்மையுடன் காணப்படுகிறது.

இங்கு அதிகளவில் உப்பு உள்ளதால் சீன மக்கள் சுமார் நான்கு ஆயிரம் ஆண்டுகளாகத் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உப்பை இந்த ஏரியிலிருந்து எடுத்து வருகின்றனர்.

இந்த ஏரியில் சோடியம் சல்பேட் உப்பு அதிக அளவு உள்ளது. உலகிலேயே இந்த உப்பு அதிகம் உள்ள மூன்றாவது ஏரி இதுதான்.

தொடக்கத்தில் மற்ற ஏரிகளைப் போன்றுதான் இந்த ஏரியும் காட்சியளித்தது. ஆனால், தற்போது அதில் உள்ள டுனாலியேல்லா சலினா (dunaliella salina) என்ற பாசியினால், இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

இந்தப் பாசி நீரினை நிறம் மாற்றும் தன்மையுடையது. இதனால், ஒருபக்கம் பச்சை நிறத்திலும், மறுபக்கம் இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிக்கிறது.

மேலும் இந்த ஏரியில் அதிக அளவு உப்பு இருப்பதால் ‘Dead Sea’ போன்று இதிலும் மனிதர்கள் மிதப்பார்கள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே இதை ‘சீனாவின் Dead Sea என்று அழைக்கின்றனர்.

பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த ஏரி ரத்த சிவப்பு நிறத்தில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.