கணவரை கொன்று நாடகமாடிய மனைவி : காதலன் ராஜேஷ் கைது!!

390

காதலனின் உதவியுடன் கணவனைக் கொன்றுவிட்டு நாடகமாடிய வழக்கில், தற்போது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாகர்ரெட்டி. இவருக்கு சுவாதி என்ற மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மனைவி சுவாதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாகவும் மாறியுள்ளது. இந்த காதலுக்கு தனது கணவர் இடையூறாக இருந்ததால், தனது காதலர் ராஜேஷுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் சுவாதி.

அதன்படி கடந்த மாதம் 27ஆம் திகதி, வீட்டில் தூங்கி கொண்டிருந்த சுதாகர் ரெட்டிக்கு மயக்க ஊசி போட்டுள்ளனர். பின்னர் இரும்புக் கம்பியால் சுதாகர் ரெட்டியை அடித்து கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சுதாகரின் உடலை அருகே உள்ள வனப்பகுதியில் புதைத்துள்ளனர்.

இந்நிலையில், சுதாகர் ரெட்டியும், ராஜேஷும் உருவத்தில் ஒரே மாதிரி இருந்ததால், தெலுங்கு படமான எவடு பாணியில் சுவாதியும், ராஜேஷும் ஒரு திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, ராஜேஷுன் வாயை மட்டும் மூடிவிட்டு, பெட்ரோலைக் கொண்டு ராஜேஷின் முகத்தை மட்டும் எரித்துள்ளார் சுவாதி.

அதன்பிறகு, உறவினர்களிடம், மர்ம கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து, கணவனை தாக்கியதாகவும், அப்போது அவரது முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த தனது காதலர் ராஜேஷை, ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய கோரியுள்ளார் சுவாதி.

ஆனால் தீக்காயம் பெரிய அளவில் இல்லை என்பதால், அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தகவல் அறிந்த உறவினர்கள், நண்பர்கள் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர். ஆனால், ராஜேஷ் தனது முகத்தை மூடியவாறு, யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

மேலும், பல சமயங்களில் தூங்குவது போல நடித்துள்ளார். எனினும், சுதாகரின் அடையாளங்கள் ராஜேஷுக்கு பொருந்தவில்லை, இதனால் உறவினர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், உடல் நலம் தேற ராஜேஷுக்கு மட்டன் சூப் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை சாப்பிட மறுத்த ராஜேஷ், தான் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகம் உறுதியானதால், உறவினர்கள் இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். அதன் பின்னர், ராஜேஷின் கைரேகையை அவருக்கு தெரியாமல் எடுத்த பொலிசார், அதனை சுதாகரின் ஆதார் அட்டையில் உள்ள கைரேகையுடன் பொருத்திப் பார்த்ததில் இரண்டு பொருந்தவில்லை.

இதனைத் தொடர்ந்து, சுவாதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வந்தது. பின்னர், கடந்த 9ஆம் திகதி சுவாதியை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ராஜேஷ் உடல்நலம் தேறியதால் நேற்று காலை அவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.