மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்த தாய் : சிக்கியது எப்படி?

316

 
இந்தியாவில் மகனை சொத்துக்காக கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த மாற்றாந்தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சாந்திலால், இவர் மனைவி ஜினல். சாந்திலால் மற்றும் ஜினல் ஆகிய இருவருக்குமே ஏற்கனவே முதல் திருமணமாகி விவாகரத்து கிடைத்த நிலையில் ஒருவரையொருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.

முதல் திருமணத்தின் மூலம் சாந்திலாலுக்கு மகனும், ஜினலுக்கு மகளும் உள்ளனர். சாந்திலாலின் சொத்துக்கள் அனைத்தும் அவர் மகன் பெயரில் இருந்துள்ளது. இது ஜினலுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பின்னாளில் தனது மகளுக்கு எந்த சொத்தும் கிடைக்காது என நினைத்து அவர் பயந்துள்ளார்.

இதையடுத்து மாற்றாந்தாயான ஜினல் தனது மகனை கொல்ல முடிவெடுத்து அவன் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை ஒரு சூட்கேசில் அடைத்து வைத்து வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து நாடகமாடி தப்பிக்க எச்சரிக்கை அலாரத்தை அழுத்திவிட்டு இரண்டு மணி நேரமாக மகனை காணவில்லை என கூறியுள்ளார். பின்னர் அருகிலிருந்தவர்களும், சாந்திலாலும் சிறுவனை தேடியும் அவன் கிடைக்காததால் இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்த பொலிசார் வீடு முழுவதும் தேடிய நிலையில் சிறுவன் சடலம் வைக்கப்பட்ட சூட்கேஸ் அவர்கள் கையில் கிடைத்தது.

பின்னர் ஜினலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்பு கொண்டார் இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.