வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஆட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (23.07.2015) மதியம் 3 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கண்டிவீதியில் பிராந்திய சுகாதார நிலையத்திற்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் தனது மனைவியை மோட்டர் சைக்கிளில் அழைத்து வந்து இறக்கிவிட்டுவிட்டு அங்கு நின்ற வேளை, ஆட்டோ ஒன்றில் வந்த சிலர் அவ் இளைஞன் மீது பலர் முன்னிலையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் அங்கு நின்ற மக்களால் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் திருமணம் ஆகி ஒரு மாதங்களே ஆன வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராசா சுரேந்திரன் (வயது 29) என்பவரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-பிராந்திய செய்தியாளர்-