ஐ.எஸ். தீவிரவாதிகள் 12 வயது சிறுவன் ஒருவனது விரல் நுனிகளை, மதம் மாற மறுத்த அவனது தந்தை மற்றும் ஏனைய கிறிஸ்தவர்கள் முன்பாக வெட்டித் துண்டித்த சம்பவம் சிரியாவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.அந்தப் பெயர் வெளியிடப்படாத சிறுவனின் தந்தை சிரிய பிராந்திய கிறிஸ்தவ தொண்டு ஸ்தாபன குழுவொன்றின் தலைவராவார் அவரும் ஏனையவர்களும் மதம் மாறுவதற்கு மறுத்ததையடுத்து, அவர் மதம் மாறத் தவறினால் அவரது மகன் சித்திரவதை செய்யப்படுவான் என ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அதற்கும் அவர் அடிபணியாததால் சினமடைந்த தீவிரவாதிகள், அந்த சிறுவனை அடித்து உதைத்து சித்திரவதை செய்து அவனது விரல் நுனிகளை வெட்டித் துண்டித்துள்ளனர்.அத்துடன் அங்கிருந்த ஏனைய கிறிஸ்தவர்கள் இருவரையும் அடித்து உதைத்த தீவிரவாதிகள், அவர்களையும் குறிப்பிட்ட சிறுவனையும் சிலுவையில் அறைந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுவனின் தந்தை உட்பட அங்கிருந்த 12 கிறிஸ்தவர்களுக்கும் தீவிரவாதிகளால் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.மரணதண்டனை நிறைவேற்றத்தின் போது அந்த 12 பேரில் ஒருவரான பெண்ணொருவர், “இயேசுவே’ என கோஷம் எழுப்பியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிரிய அலெப்போ மாகாணத்திலுள்ள கிராமமொன்றிலேயே அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேசமயம் அதே தினத்தில் கிறிஸ்தவ கிராமமொன்றிலிருந்து 29 வயது மற்றும் 33 வயதுடைய இரு பெண்கள் உட்பட 8 பேரை கடத்திய தீவிரவாதிகள், அவர்களையும் மதம் மாற நிர்ப்பந்தித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களும் மதம் மாற மறுக்கவும் இந்தக் குழுவினர் மத்தியிலிருந்த இரு பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தீவிரவாதிகள், அவர்களுக்கும் எனைய 4 ஆண்களுக்கும் தலையைத் துண்டித்து மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
மேற்படி கிறிஸ்தவர்கள் அனைவரும் தமது மதத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காகவே கொல்லப்பட்டுள்ளதாக சிரிய கிறிஸ்தவர்களுக்கு உதவும் முகமாக செயற்படும் தொண்டு ஸ்தாபனமான பர்னாபாஸ் நிதியத்தின் ஸ்தாபகர் பற்றிக் சூக்டியோ தெரிவித்தார்.