பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சின் வடபிராந்தியத்தின் புறநகரிலுள்ள தொடர்மாடியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஆயுதமோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது தற்கொலை குண்டுதாரியான பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏழு தடவைகள் வெடிச்சத்தங்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகம் கேட்டதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் அப்தில் ஹமீத் அபராவூத் உள்ளிட்ட மேலும் ஐந்து ஆயுததாரிகள் சந்தின்நீ பகுதியிலுள்ள தொடர்மாடியில் மறைந்திருக்கலாம் என பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
இந்த சோதனை நடவடிக்கையின் போது மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிக்கான வீதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தின்நீ என்ற நகரிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், அங்குள்ளவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ள அதேவேளை போக்குவரத்துக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.