ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர் வடமாகாண கல்வி அமைச்சரினால் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து இன்று (12.02.2016) பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டு வருகின்றது.
இதில் செயலாளரே அதிகார துஸ்பிரயோகத்தை நிறுத்து, கண்டிப்பான ஆசிரியர்களின் கைகளை கட்டாதே, ஆசிரியர் இடமாற்றத்தை இரத்து செய், முறைகேடான இடமாற்றத்திற்கு முறையான தீர்வு வேண்டும் போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தி தெற்கு வலயக்கல்விப் பணிமனை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த மாணவன் ஒருவர், எம்மை நல்வழிப்படுத்தி ஒழுக்கசீலராக மாற்றிய எமது ஆசானுக்கு கிடைத்த தண்டனை இது, வடமாகாண கல்வி அமைச்சரே பக்கசார்பின்றி எமது ஆசிரியரை எமது பாடசாலைக்கு மிண்டும் பெற்றுத்தரும் வரை இக் கவனயீர்ப்புப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
இன்று காலை 08.00 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டமானது தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
தொடர்ந்து செய்திகளை தெரிந்துகொள்ள வவுனியா நெற் செய்திகளுடன் இணைந்திருங்கள்.
-சம்பவ இடத்திருந்து பிராந்திய செய்தியாளர் பாஸ்கரன் கதீஷன்-