ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.
ஒருபுறம் படம் குறித்த விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கபாலி படத்தின் நிறை, குறைகளை அலசி ஆராய்கின்றார்கள் விமர்சகர்கள்.
இந்நிலையில், கபாலி பட விமர்சனம் பற்றி ஒருவரின் கருத்தைத் தெரிந்துகொள்ள ரஜினி ஆவலுடன் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் வேறு யாரும் அல்ல. ரஜினியின் ஆருயிர் நண்பர் ராஜ் பகதூர். தற்போது அவர் பெங்களூரில் வசிக்கிறார்.
ரஜினி நடத்துனராகப் பணிபுரிந்த பஸ்ஸில் ராஜ் பகதூர்தான் ஒட்டுனர். பெங்களூரில் 10A பேருந்தில், 1970 ஆம் ஆண்டிலிருந்து 3 வருடங்கள், ரஜினியும் அவரும் ஒன்றாகப் பணிபுரிந்துள்ளார்கள்.
ரஜினியின் நடிப்பாற்றலை வெளிக்கொணர ராஜ் பகதூர் ரஜினியை சென்னைக்கு அனுப்பி நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படிக்க வைத்து அதற்கான முழு செலவுகளையும் ஏற்றார்.
இதனால் ரஜினிக்கு எப்போதும் இவர் மேல் அலாதியான நட்பும், பிரியமும் உண்டு. எப்போது ரஜினி பெங்களூர் சென்றாலும் இவரின் வீட்டிற்குச் சென்று விடுவார்.
சென்னை வந்து தன்னுடன் தங்குமாறு ரஜினி பலமுறை அழைத்தும், நட்பு பாதித்துவிடும் என்பதால் ராஜ் பகதூர் அதை மறுத்துவிட்டார்.
ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், இவரின் விமர்சனத்துக்காக ரஜினி காத்திருப்பது வழக்கமான ஒன்றுதான், அதுபோல் கபாலிக்காகவும் காத்திருக்கிறார்.







