அமெரிக்க தேர்தலில் சாதிக்கக் காத்திருக்கும் இந்திய வம்சாவளிப் பெண்கள்!!

953

Indian

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய மேடைப் பேச்சு பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

அப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அமெரிக்க தேர்தலுக்காக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த, அதுவும் தமிழ் நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் அமெரிக்க பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளி பெண்கள்.

ஜனநாயகக் கட்சி சார்பில், வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் பிரமிளா ஜெயபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

இதேபோல ஜனநாயக கட்சியின் சார்பில், தற்போது கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக உள்ள கமலா ஹாரிஸ் என்பவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் கமலா வெற்றி பெற்றால் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை கிடைக்கும்.

இந்தத் தேர்தலில் சமீபத்தில் கருத்து கணிப்பில் பிரமிளாவும், கமலாவும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் ஃப்ளோரிடாவில் இருந்து குடியரசு கட்சி சார்பில், லத்திகா மேரி தாமஸ் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இவர் கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பாளை பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் ஆவார். ஜனநாயகக் கட்சி சார்பில் 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமிபேரா மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதேவேளை, இந்தத் தேர்தலில் மொத்தம் 19 பெண்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.