லஞ்சம் கொடுப்பதற்காக வீதி வீதியாக பிச்சை எடுத்த சிறுவன்!!

585

Lancham

உளுந்தூர்பேட்டை அருகே தந்தையின் இறப்பிற்காக வந்த அரசு உதவித் தொகையை பெறுவதற்கு வீ.ஏ.ஒ விற்கு லஞ்சம் கொடுப்பதற்காக சிறுவன் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர் பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூழித் தொழிலாளி கொளஞ்சி (48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவரது குடும்பத்திற்கு சமூக நல திட்டத்தின் மூலம் அரசு உதவி தொகையாக ரூபாய் 12,500 வழங்கப்பட்டது.

இதற்கான காசோலை வாங்குவதற்காக சமூக நலத்துறை அலுவலகத்துக்கு கொளஞ்சியின் மகன் அஜித்குமார் (15) சென்றுள்ளார். அப்பொழுது சமூக நலத்துறை அதிகாரிகள் வி.ஏ.ஓ விடம் கையெழுத்து வாங்கி வருமாறு கூறியதையடுத்து அஜித்குமார் வி.ஏ.ஓவிடம் கையெழுத்து வாங்க சென்ற பொழுது வி.ஏ.ஓ அஜித்குமாரிடம் லஞ்சமாக 3 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சிறுவன் அஜித்குமார் லஞ்ச பணம் கொடுப்பதற்காக தெருக்களிலும், பேருந்துகளிலும் பாத்திரத்தை வைத்து பிச்சை எடுத்துள்ளார்.

மேலும், தந்தையின் இறப்பிற்கு வந்த அரசு உதவித்தொகை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்டதற்காக சிறுவன் தெருத்தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.